ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம்

1. ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்,
அடியேனைக் காத்தீரே;
மீண்டும் என்னை உமக்கேற்ற
சேவை செய்யக் கொள்வீரே;
என் இதயம் மனம் செயல்
யாவும் உம்மைத் துதிக்கும்;
ஆண்டவா, உமக்கே ஸ்தோத்திரம்!
அடியேனை ஆட்கொள்ளும்.

2. இவ்வுலக வாழ்நாள் எல்லாம்
நான் உமக்காய் வாழவும்,
அன்பு, தியாகம், அருள், பக்தி
அனைத்தும் பெற்றோங்கவும்,
பாவ அழுக்கெல்லாம் நீக்கி
தூய பாதை செல்லவும்,
ஆண்டவா, உம் அருள் தாரும்
அடியேனை ஆட்கொள்ளும்.

3. வியாதி, துக்கம், தொல்லை வந்தால்
உம்மை நோக்கிக் கெஞ்சுவேன்;
உம் பிரசன்னம் எனக்கின்பம்
சாவுக்கும் நான் அஞ்சிடேன்;
துன்பத்தில் என் நண்பர் நீரே,
இன்பம் ஈபவர் நீரே,
ஆண்டவா, நீர் தாம் என் தஞ்சம்,
அடியேனை ஆட்கொள்ளும்.

4. மூவராம் திரியேகர்க்கென்றும்,
மாட்சி மேன்மை மகிமை;
விண்ணில் தூதர் தூயர் கூட்டம்
அவர் நாமம் துதிக்கும்;
மண்ணில் மாந்தர் கூட்டம் யாவும்
அவர் பாதம் போற்றவும்,
ஆண்டவா, உம் அருள் தாரும்,
அடியாரை ஆட்கொள்ளும்.

Start Downloading Your Apps