ஐயையா நான்‌ ஒரு மா பாவி

ஐயையா, நான்‌ ஒரு மா பாவி;-என்னை
ஆண்டு நடத்துவீர்‌, தேவாவி!

சரணங்கள்‌

1. மெய்‌ ஐயா, இது தருணம்‌, ஐயா;-என்றன்‌
மீதிலிரங்கச்‌ சமயம்‌, ஐயா;
ஐயையா, இப்போ தென்மேல்‌ இரங்கி-வெகு
அவசியம்‌ வரவேணும்‌, தேவாவி! - ஐயையா

2. எனதிருதயம்‌ பாழ்நிலமாம்‌;-ஏழை
என்னைத்‌ திருத்தி நீர்‌ அன்பாகத்‌
தினமும்‌ வந்து வழி நடத்தும்‌,-ஞான
தீபமே, உன்னத தேவாவி! - ஐயையா

3. ஆகாத லோகத்தின்‌ வாழ்வை எல்லாம்‌-தினம்‌
அருவருத்து நான்‌ தள்ளுதற்கு
வாகான சுத்த மனம்‌ தருவீர்‌,-நீர்‌
வல்லவராகிய தேவாவி. - ஐயையா

4. பத்தியின்‌ பாதை விலகாமல்‌,-கெட்ட
பாவத்தில்‌ ஆசைகள்‌ வையாமல்‌
சத்திய வேதப்படி நடக்க,-என்னைத்‌
தாங்கி நடத்திடும்‌, தேவாவி! - ஐயையா

5. அன்பு, பொறுமை, நற்‌ சந்தோஷம்‌,-என்‌
ஆண்டவரின்‌ மேல்‌ விசுவாசம்‌,
இன்ப மிகு மெய்ச்‌ சமாதானம்‌,-இவை
யாவும்‌ தருவீரே, தேவாவி! - ஐயையா

6. ஏசுகிறிஸ்துவில்‌ நான்‌ சார்ந்து,-அவர்‌
இடத்திலேயே நம்பிக்கை வைக்க,
மாசில்லாத்‌ துய்யனே, வந்துதவும்‌;-நீர்‌
வராமல்‌ தீராதே, தேவாவி! - ஐயையா

- அருள்திரு. பாக்கியநாதன்‌ தாவீது

Start Downloading Your Apps