கிஞ்சிதமும்‌ நெஞ்சே அஞ்சிடாதே

கிஞ்சிதமும்‌ நெஞ்சே, அஞ்சிடாதே;-நல்ல
கேடகத்தைப்‌ பிடி நீ;-விசுவாசக்‌
கேடகத்தைப்‌ பிடி நீ.

வஞ்சனையாகவே பேய்‌ எதிர்த்துன்றனை
வன்னிக்‌ கணைதொடுத்‌ தெய்கின்ற வேளையில்‌,
நெஞ்சில்‌ படாமல்‌ தடுக்க அது நல்ல
நிச்சயமான பரிசை அறிந்து நீ. - கிஞ்சிதமும்‌

சரணங்கள்‌

1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச்‌ சகிக்க,
பத்தியில்‌ தெளிக்கவும்‌,-நித்ய
ஜீவனைப்‌ பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,
திறமை அளிக்கவும்‌,
சாவே, உன்‌ கூர்‌ எங்கே? பாதாளமே, உன்‌
ஜெயம்‌ எங்கே? என்று நீ கூவிக்‌ களிக்கவும்‌,
தேவன்‌ உகந்துனைத்‌ தான்‌ அங்கீகரிக்க,
செய்யவுமே அது திவ்ய நல்‌ ஆயுதம்‌. - கிஞ்சிதமும்‌

2. பண்டையர்‌ அந்தப்‌ பரிசையினால்‌ அல்லோ,
கண்டடைந்தார்‌ பேறு? -நல்ல
தொண்டன்‌ ஆபேல்‌ முதலான வைதீகரைத்‌
தொகுத்து வெவ்வேறு
விண்டுரைக்கில்‌ பெருகும்‌; தீ அணைத்ததும்‌,
வீரிய சிங்கத்தின்‌ வாயை அடைத்ததும்‌,
கண்டிதமாய்‌ வெற்றி கொண்டது மாம்பல
காரியங்களையும்‌ பார்‌; இது மா ஜெயம்‌. - கிஞ்சிதமும்‌

3. ஊற்றமுடன்‌ இப்பரிசைப்‌ பிடித்திட
உன்‌ செயல்‌ மா பேதம்‌;-அதின்‌
தோற்றமும்‌ முடிவும்‌ ஏசுபரன்‌ செயல்‌,
துணை அவர்‌ பாதம்‌;
ஏற்ற வணைக்கவே பணிவாக
இரந்து மன்றாடி அவர்‌ மூலமாகவே,
ஆற்றல்‌ செய்‌ தேற்றரவாளி பரிசுத்த
ஆவி உதவியை மேவி, அடைந்து நீ. - கிஞ்சிதமும்‌
- யோ. பால்மர்‌

Start Downloading Your Apps