சிந்தைசெய்யும்‌ எனில்‌ நிரம்புவீர்‌

சிந்தைசெய்யும்‌ எனில்‌ நிரம்புவீர்‌, தேவாவி உமைச்‌
சிந்தைசெய்யும்‌ என்னை நிரப்புவீர்‌.

தந்தைப்‌ பரனாரினின்றும்‌ மைந்தனார்‌ கிறிஸ்தினின்றும்‌
விந்தையாய்ப்‌ புறப்பட்டேகும்‌ வித்தகத்தின்‌ ஆவியேநீர்‌ -சிந்தை

சரணங்கள்‌

1. பாலனாய்ப்‌ பரமதந்தைக்கும்‌-அவரின்நேய
சீலனாம்‌ கிறிஸ்தியேசுக்கும்‌
சாலவே என்றென்னைச்‌ சேர்த்திட்டீர்‌-அத்தாலே தேவ
கோலம்‌ என்றன்‌ பங்கதாயிற்று.
தந்தைதாயர்‌ தந்த வாக்கைச்‌ சொந்தவாயால்‌ நான்‌ கொடுக்க
வந்திருக்கும்‌ வேளைதனில்‌ தந்தைசுதன்‌ ஆவியே நீர்‌. -சிந்தை

2. திரியேக தேவனே என்றே-அவரைவிட்டுப்‌
பிரியேன்‌ என்‌ பிராணன்போனாலும்‌.
அரிய அவரின்தயையே-எனக்கு என்றும்‌
உரிய ஒன்றான பொருளே.
பொய்‌, லோகம்‌, மாம்சம்‌ என்னைப்‌ பிடித்திழுத்தாலும்‌
ஒய்‌' பரிசுத்த ஆவி உதவுவீர்‌ எனக்கென்றும்‌. -சிந்தை

3. பக்தியுள்ள ஜீவியம்செய்து-பகலின்‌ சேயாய்‌
எத்திசையிலும்‌ விளங்கிடச்‌,
சுத்தமனம்‌ செய்கையைத்தரும்‌-எனைநான்‌ என்றும்‌
தத்தம்செய்யக்‌ கற்பித்தருளும்‌,
உன்னதத்தில்‌ வாழ்‌ தந்தைக்கும்‌ உயர்சுதன்‌ ஆவியர்க்கும்‌
என்னகத்தினின்றும்‌ துதிஏறுவதாக, ஆமென்‌. - சிந்தை

- வே. தேவசகாயம்‌

Start Downloading Your Apps