பக்தியாய்‌ ஜெபம்‌ பண்ணவே

பக்தியாய்‌ ஜெபம்‌ பண்ணவே
சுத்தமாய்த்‌ தெரியாதய்யா!
புத்தியோடுமைப்‌ போற்ற, நல்‌
சித்தம்‌ ஈந்திடும்‌, யேசுவே!

2. பாவ பாதைவைவிட்டு நான்‌
ஜீவ பாதையில்‌ சேர, நல்‌
ஆவி தந்தெனை ஆட்கொளும்‌,
தேவ தேவ குமாரனே!

3. பொய்யும்‌ வஞ்சமும்‌ போக்கியே
மெய்யும்‌ அன்பும்‌ விடாமல்‌, யான்‌
தெய்வமே, உனைச்‌ சேவித்திங்‌
குய்யும்‌! நல்வரம்‌ உதவுவாய்‌.

4. அப்பனே! உனதன்பினுக்‌
கெப்படிப்‌ பதில்‌ ஈட்டுவேன்‌?
செப்பும்‌ என்னிதயத்தையே
ஒப்படைத்தனன்‌ உன்னதே.

5. சிறுவன்‌ நானுனைச்‌ செவ்வையாய்‌
அறியவும்‌, முழு அன்பினால்‌
நிறையுமுள்ள நிலைக்கவும்‌
இறைவனே! வரம்‌ ஈகுவாய்‌.

6. அண்ணலே! உனதாலயம்‌
நண்ணி, நல்லுணர்வோடுனை
எண்ணி யெண்ணி இறைஞ்ச, உன்‌
கண்ணில்‌ இன்னருள்‌ காட்டுவாய்‌.

- எச்‌.எ. கிருஷ்ண பிள்ளை

Start Downloading Your Apps