யேசு நாதனே இரங்கும்‌ என்

யேசுநாதனே!-இரங்கும்‌ என்‌-யேசு நாதனே!

ஆசைக்‌ கிறிஸ்தென தன்புள்ள நேசனே!
அருளே! தெருளே! பொருளே!
ஆவல்‌ ஆகினேன்‌, மகா பிரலாபம்‌” மூழ்கினேன்‌;
ஆயா! ஆயா! தூயா! ரட்சியும்‌;
ஆபத்தினால்‌ பரிதபித்து நிற்கிறேன்‌. - யேசு

1. அருமைரட்சகனே! உனை அல்லாமல்‌ ஆதரவார்‌? ஐயா!
ஆத்துமநாயகன்‌ நீ என்னக்கல்லவோ? அன்புகூர்‌ மெய்யா!
தருணம்‌, தருணம்‌, கைவிடாதேயும்‌;
தலைவா! நலவா! வலவா!
தாமதியாதே-கிருபைசெய்யும்‌-சாமி இப்போதே
தாதா! நாதா! நீதா! நீகா!
தருமப்பிர காசனே! பரம சருவேசனே! - யேசு

2. ஐந்துகாயத்தின்‌ கிருபைக்கோட்டையில்‌ அடைக்கலந்‌ தாவே
ஆதாமின்‌ பாவத்தாலே மானிடன்‌ ஆன மெய்வாழ்வே
விந்தைக்கிருபை அளிக்கவேண்டும்‌;
விமலா! நிமலா! அமலா!
வேறுபண்ணாதே-மிகும்சீறு-மாறுநண்ணாதே,
மேலா! கோலா! நூலா! நீயே
விரும்பிச்சேரும்‌, கோவே! திரும்பிப்பாரும்‌, தேவே! - யேசு

3. உன்னைப்போல்‌ நரர்க்கார்‌ பாடுபட்டது? உரிமைச்‌ சீமானே!
உத்தமமேய்ப்பனே! சத்தியமீட்பனே! உண்மைக்‌ கோமானே!
என்னை ரட்சிப்ப துன்கடன்‌ அல்லவோ?
இறையே! நிறையே! பொறையே!
ஏதம்‌ இல்லானே!-அடியாரைத்‌-தீது சொல்லானே!
ஏகா! வாகா! ஆகா! இரட்சியும்‌;
இரக்கமே உன்தஞ்சம்‌; நெருக்கமே பிரபஞ்சம்‌. - யேசு

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps